சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக பண்ணாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்று அம்மன் சப்பரம் கோயிலை சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 28ம் தேதி கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் இரவில் அம்மன் புகழ் பாடும் பாடல்களை பாடியபடி பக்தர்கள் கம்ப நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று அதிகாலை துவங்கியது. முன்னதாக அதிகாலை 2.50 மணிக்கு தெப்பக்குளத்திற்கு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சிக்காக மேளதாளம் முழங்க புறப்பட்டு சென்றனர். தெப்பக்குளத்தில் இருந்து படைக்கலத்துடன் அம்மன் அழைத்து வரப்பட்டு அதிகாலை 3.40 மணிக்கு படைக்கலம் கோயிலை வந்தடைந்தது. இதை தொடர்ந்து கோயில் முன் தயார் செய்யப்பட்ட குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலர் பந்து உருட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து திருக்குண்டம் திறக்கப்பட்டது. அதிகாலை 3.57 மணிக்கு திருக்குண்டம் முன் சிறப்பு பூஜை செய்து பூசாரி ராஜசேகர் பயபக்தியுடன் குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து பரம்பரை அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் குண்டம் இறங்கினர்.
பின்னர் வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டத்தில் தீ மிதித்த பக்தர்கள் நேராக கோயிலுக்குள் சென்று பண்ணாரி அம்மனை தரிசனம் செய்தனர். மாலை 4 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நாள் முழுவதும் பக்தர்கள் தீ மிதிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கால்நடைகளோடு விவசாயிகள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தமிழ்நாடு சிறப்பு இலக்கு படை ஐஜி முருகன், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, ரித்தீஷ் மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட விஐபிக்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாலை வரை சுமார் 1.5 லட்சம் பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள் என கூறப்படுகிறது.