சென்னை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகசிகாமணிநகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (31). இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, பாண்டியம்மாள் அரும்பாக்கம் வள்ளலார் தெரு எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2015 ஜூன் 12ம் தேதி அரும்பாக்கம் வந்த ராஜ்குமார், பாண்டியம்மாளை கத்தியால் குத்தினார்.
இதில், பலத்த காயம் அடைந்த பாண்டியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார். இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் ராஜ்குமாரை கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் ராஜ்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.