Saturday, May 18, 2024
Home » போலி பாஸ்போர்ட் பெற்று கொடுத்ததாக குற்றச்சாட்டு ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான புகாரில் அடிப்படை ஆதாரமில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

போலி பாஸ்போர்ட் பெற்று கொடுத்ததாக குற்றச்சாட்டு ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான புகாரில் அடிப்படை ஆதாரமில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

by Dhanush Kumar

சென்னை, : போலி பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்ததாக ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று டி.ஜி.பி. அறிக்கை அளித்துள்ளதாக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த காலத்தில் 200க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும், இவை டேவிட்சன் மனைவி நடத்தும் டிராவல் ஏஜன்சி மூலம் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணையை 3 மாதங்களில் முடிக்க கியூ பிராஞ்ச் போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதை கண்காணிக்கும்படி, எஸ்.பி. சி.ஐ.டி ஐ.ஜி.க்கும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வாராகி என்பவர் தமிழக அரசுக்கு கடந்த மே மாதம் மனு அனுப்பியிருந்தார். இந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான புகார் குறித்து விசாரித்து, முகாந்திரம் இருந்தால் துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் அகர்வால், விஜயேந்திரன் ஆஜராகினர். அப்போது, 200க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 போலீசாருக்கு எதிராக மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனால் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் அகர்வால் கோரினார். அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மனுதாரரின் கோரிக்கை மனுவின் அடிப்படையில் டி.ஜி.பி. விசாரணை நடத்தினார். இதில் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று தெரியவந்து அரசுக்கு அறிக்கையாக டிஜிபி அனுப்பியுள்ளார். இந்த தகவல் கடந்த செப்டம்பர் மாதமே மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், அரசு கடிதம் கிடைத்ததா என்று மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதுகுறித்த தகவல்களை கேட்டு தெரிவிப்பதாக பதிலளிக்கப்பட்டதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 31க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

You may also like

Leave a Comment

15 − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi