திசையன்விளை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மனைவி மகாராணி (63). இட்டமொழி பஞ்சாயத்து முன்னாள் வார்டு கவுன்சிலரான மகாராணி, கணவரை பிரிந்து அரசு இலவசமாக கட்டிக் கொடுத்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் டீ போடுவதற்காக சிலிண்டரை பற்ற வைத்ததாக தெரிகிறது. அப்போது சிலிண்டரில் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் வீட்டின் மேற்கூரை ஆஸ்பெஸ்டாஸ் சீட் பல அடி தூரம் பறந்து சென்று கீழே விழுந்தது. மேலும் படுகாயமடைந்த மகாராணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.