பாட்னா: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் புறப்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானிகள் உடனடியாக ஹெலிகாப்டரை இயல்புநிலைக்கு கொண்டு வந்ததை அடுத்து மீண்டும் பறந்து சென்றது. இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த கட்ட தேர்தல் மே 7ல் நடக்க உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், பீஹார் மாநிலம் பெகுசாராய் பகுதியில் பிரசாரம் முடித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டரில் கிளம்பினார். அப்போது சற்று மேல் எழும்பிய ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து சிறிது தூரம் காற்றில் இழுத்து செல்லப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு நிமிட தடுமாற்றத்துக்குப் பிறகு ஹெலிகாப்டரை கட்டுக்குள் கொண்டுவந்த பைலட் சிறப்பாக செயல்பட்டு, மேலே பறக்கும் வகையில் இயக்கினார். பின்னர் ஹெலிகாப்டர் அங்கிருந்து பறந்து சென்றது.