பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன்(50). இவர், எம்.கே.நகர் பகுதியில், பேரூராட்சி வளமீட்பு பூங்கா அருகில்பட்டாசு குடோன் வைத்துள்ளார். நேற்று அதிகாலை 5 மணிக்கு, பட்டாசு குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு, வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. தகவலறிந்து பென்னாகரம் தீயணைப்பு வீரர்கள் வந்து நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் குடோன் இடிந்து தரைமட்டமானது. அதிகாலை நேரம் என்பதாலும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்ததாலும், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சமீபகாலமாக பட்டாசு குடோன் செயல்படாமல் இருந்ததும், 10 ஆண்டுக்கு முன்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் பென்னாகரம் நீதிமன்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.