சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தி.நகரில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விசிக மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் செல்வம் புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் மணியன் மீது, வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர், அவரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியன், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி அல்லி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மணியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணியன் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரியுள்ளார் என்று கூறி மன்னிப்பை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்தார்.
அப்போது, காவல்துறை சார்பில் எஸ்.சி., எஸ்.டி வழக்குகளுக்கான அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, மணியனுக்கு ஜாமீன் வழங்க கூடாது. அரசியல் சாசனம் என்றாலே அம்பேத்கர் தான் நினைவுக்கு வரும் நிலையில் அவரை மணியன் இழிவுப்படுத்தியுள்ளார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் மணியனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.