இந்தியாவில் மாநிலங்கள் வரியாக வசூலிக்கும் நிதியானது ஒன்றிய அரசுக்கு செல்கிறது. அதன் பிறகு அந்த நிதியானது மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. பல்வேறு அளவுகோல்களின் படி, இந்த நிதி பகிர்வு நடக்கிறது. இந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான வரிவருவாய் நிதியை, ஒன்றிய நிதி அமைச்சகம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.25,495 கோடி விடுவித்துள்ளது. பீகாருக்கு ரூ.14,295 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.11ஆயிரத்து 157 கோடியும், மகாராஷ்டிரத்திற்கு ரூ.11ஆயிரத்து 157 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.8,978 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.5,797 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆந்திராவுக்கு ரூ.5,752 கோடியும், கேரளாவுக்கு ரூ.2,736 கோடியும், கர்நாடகாவிற்கு ரூ.4,183 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் படி, பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அதிகளவில் நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களை பொறுத்தவரை, பெயரளவுக்கு மட்டுமே நிதிப்பகிர்வு நடந்துள்ளது என்பது வெட்டவெளிச்சமாகிறது. உதாரணமாக தமிழ்நாட்டிற்கு ரூ.5,797 கோடி என்பதும், உத்தரபிரதேசத்திற்கு ரூ.25,495 கோடி என்பதும் ஏணி வைத்தாலும் எட்டாத ஒன்று. தான் ஆட்சி செய்யாத மாநிலங்களை பாரபட்சமான நிதிபகிர்வால் ஓரங்கட்டியுள்ளது ஒன்றிய அரசு.
இதில் தங்களது கட்சியால் கால் பதிக்கவே முடியாது என்று கருதும் தமிழ்நாட்டிற்கு, சொற்ப நிதியை பகிர்ந்தளித்து வஞ்சம் தீர்த்துள்ளது ஒன்றிய அரசு. கடந்த ஜனவரி 10ம்தேதி, மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய வரிப்பகிர்வை ஒன்றிய அரசு வெளியிட்டது. அப்போதும் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.13,088.51 கோடி ஒதுக்கப்பட்டது. இதேபோல் பீகாருக்கு ரூ.7,338.44 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.5,727.44 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.5,488.88 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.4,608.96 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.4,396.64 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.2,976.10 கோடி வரிப்பகிர்வு நிதி விடுவிக்கப்பட்டது.
இது ஒருபுறமிருக்க, சென்னையின் பெரும்புயல் பாதிப்புகளுக்கும், தென்மாவட்டங்களின் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கிற்கும், தமிழ்நாடு அரசு ஆதாரங்களுடன் கேட்ட நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. சென்னையின் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்குமாறு முதல்வர் வைத்த கோரிக்கையும், ஒன்றிய அரசின் செவிகளில் சென்று சேரவில்லை. இப்படிப்பட்ட நிலையில், உத்தரபிரதேசத்திற்கு கடந்த மாதத்தை விட கூடுதலாக 12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டிற்கு 3ஆயிரம் கோடிக்கும் குறைவான அளவே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது மாநிலங்கள் செலுத்தும் வரி வருவாயில் இருந்து தான் விடுவிக்கப்படுகிறது.
அதாவது மாநிலங்கள் ஒரு ரூபாய் செலுத்தினால், அதிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே அந்த மாநிலங்களுக்கு திருப்பி விடுவிக்கப்படுகிறது. இதில் தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு குறைவான வரி விகிதத்தையே ஒன்றிய அரசு திருப்பித் தருகிறது. அதே நேரத்தில், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் செலுத்தும் வரியை, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிகளவில் பிரித்துத் தருவது எப்போதும் தொடர்கிறது. தென்மாநிலங்களுக்கு தொடர்ந்து ஓரவஞ்சனை செய்வதும், சமூக நீதிக்கொள்கை திட்டங்களின் தாய்நிலமாக இருக்கும் தமிழ்நாட்டை புறக்கணிப்பதும் ஜனநாயகத்திற்கு புறம்பானது என்றால் அது மிகையல்ல.