ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில், குழு அமைத்து கண்காணித்த கிராம மக்கள், கழிவுநீர் வெளியேற்றிய ஆலையை கண்டுபிடித்து, அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் சுமார் 200 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள பல ஆலைகள் விதிகளை மீறி கழிவுகளை வெளியேற்றுவதால் 10 கி.மீ தொலைவிற்கு நீர் ஆதாரங்களும், குளங்களும் மாசடைந்துள்ளன. இதனால் பாதிக்கபடும் மக்கள், குழுக்கள் அமைத்து ஆலைகளை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் கட்டுமான பணிகள் நடைபெற்றுவரும் ஒரு ஆலையில் இருந்து செந்நிறத்தில் கழிவுநீர் வெளியேறியதை கண்டறிந்தனர். அந்த ஆலையின் ராட்சத குழாயில் தேக்கி வைக்கபட்டிருந்த கழிவுநீரை மோட்டார் மூலம் வெளியேற்றியதை கண்டுபிடித்த பொதுமக்கள், சிப்காட் வளாகத்தில் உள்ள மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்திற்கு சோதனைக்காக கழிவுநீரை எடுத்து சென்றனர். தொடர்ந்து அந்த ஆலை மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். ரசாயண கழிவுகள் மற்றும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் பலவகை நோய்களால் பாதிக்கபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலையை ஆய்வு செய்தனர். பின்னர் கழிவுநீர் மாதிரி பரிசோதனை செய்யபட்டு நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.