ஈரோடு: நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் -3 விண்கலத்தை தரையிறங்கி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பரிசளிப்பதற்காக சந்திராயன் -3 உருவத்துடன் கூடிய கைத்தறி போர்வையை சென்னிமலை சேர்ந்த நெசவாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த அப்புசாமி சென்டெஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 25 வருடங்களாக வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரபலமானவர்களின் சாதனைகளை கைத்தறி நெசவு மூலம் போர்வையாக தயார் செய்வது அவரது வழக்கம்.
தற்போது சந்திரனின் தென் துருவத்தில் கால்பதித்து சாதித்த சந்திராயன் -3 விண்கலத்தை கைத்தறி போர்வையில் தத்ரூபமாக அப்புசாமி உருவாக்கி அசத்தியுள்ளார். அதில் indiyas historic leap chandrayaan -3 உள்பட பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோர் உருவங்களை போர்வையில் வடிவமைத்து அவர்களுக்கு அப்புசாமி பரிசளித்துள்ளார். தற்போது சந்திரயான்3 விண்கலம் பொறித்த போர்வையை சந்திராயன் -3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உள்பட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நேரில் பரிசளிக்க அப்புசாமி விரும்புகிறார்.