புதுடெல்லி: அதிமுக என்ற கட்சியை சுயநலத்துக்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பிரித்து விட்டார்கள் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அதிகப்படியான பெரும்பான்மை இருப்பதை அடிப்படையாகக் கொண்டு எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்படுவதாக கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
மேலும், இது எதிர்வரும் காலத்தில் நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டதாகும். அந்த நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் புரிந்து வைத்துள்ளது. அதனை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம். இவை அனைத்தின் அடிப்படையில் தான் அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட தேர்தல் ஆணையத்தில் பதில் மனுவுக்கு வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய விளக்க மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,’சொந்த பிரச்னைக்காக அதிமுக என்ற கட்சியை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பிரித்து விட்டனர். கட்சி கொள்கை தொண்டர்களின் நலன் ஆகியவற்றை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருவருக்குமே கிடையாது.
அதிமுக என்ற கட்சியையும், அதன் தொண்டர்களையும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து சொந்த நலனுக்காக பழிவாங்கி வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக வெளியிட்ட முடிவு என்பது மிகவும் தவறானதாகும். அதனால் சிவில் சூட் வழக்கின் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் வரையில் அதிமுக விவகாரங்களில் கடந்த 2022ம் ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது உட்பட அனைத்து நடவடிக்கையையும் நிறுத்தி வைக்க தேர்தல் ஆணைத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.