சென்னை: சென்னை எண்ணூரில் 8 கிராம மீனவர்கள் கடையடைப்பு போராட்டமும், தமிழ்நாடு அரசின் கவன போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். வடசென்னை அனல் மின் நிலையம் எண்ணூர் பகுதியில் இயக்கப்படுகிறது. அதனை ஒட்டிய கொசஸ்தலை ஆற்று பகுதியை மையமாக வைத்து வடசென்னை அனல் மின் நிலையதில் இருந்து வெளியேறும் சாம்பல், நிலக்கரி கழிவுகள் சுடுநீர், கட்டிட கலவைகள் அனைத்தும் ஆற்றில் கொட்டப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடல்வாழ் உயிரினங்கள் அழிவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பல ஆண்டுகளாகவே மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடையடைப்பு போராட்டம், கருப்பு கொடி ஏந்தி போராட்டம், மறியல் போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையெனில் 8 கிராம மீனவ மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், தாசில்தார், வட்டாட்சி அலுவலர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்பும் இவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்நிலையில், மீனவர்களுக்கு ஆதரவாக எண்ணூர் வணிகர்கள் தாழங்குப்பம் – எண்ணூர் வரை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எண்ணூரில் நடைபெறும் போராட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் உயர்மின் கோபுரத்தை அமைக்க கூடாது எனவும் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் பீரங்கி வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் எண்ணூர் பகுதி முழுவதுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.