மும்பை: பண பரிவர்த்தனை மோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஜெயந்த் பாட்டீலுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஐ.எல் அண்ட் எப்.எஸ் நிறுவனத்தின் ஆடிட்டர்களான டெலோய்ட் ஹஸ்கின்ஸ், பி.எஸ்ஆர் அண்ட் அசோசியேட்ஸ் நிறுவனங்களில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியது. இந்த நிறுவனம் முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீலுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு கமிஷன் என்ற பெயரில் பணம் கொடுத்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத் துறை பாட்டீலுக்கு சம்மன் அனுப்பியது. கடந்த 12ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. ஆனால், தனிப்பட்ட வேலைகள் காரணமாக விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என கூறியிருந்தார். இந்த நிலையில் வரும், 22ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.