பெங்களூரு: சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்த டபுள் டெக்கர் சூப்பர் பாஸ்ட் ரயில், பிசாநத்தம் ரயில் நிலையம் வரும் போது, திடீரென தடம் புரண்டது. தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை வழியாக கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்திற்கு தினமும் டபுள் டெக்கர் (ரயில் எண் 22625) சூப்பர் பாஸ்ட் ஏசி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில், காலை 11.30 மணிக்கு குப்பம்-பங்காருபேட்டை இடையில் உள்ள பிசாநத்தம் ரயில் நிலையம் வந்தபோது, ரயிலில் இருந்த சி-1 பெட்டி மட்டும் தடம் புரண்டது.
தண்டவாளத்தில் இருந்து சக்கரங்கள் கீழே இறங்கியதால் பயங்கரமாக சத்தம் வந்தால், பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனடியாக லோகோ பைலட் வண்டியை நிறுத்தினார். இது பற்றி பங்காருபேட்டை மற்றும் பெங்களூருவில் உள்ள ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.