சென்னை: சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் நகர் மெயின் சாலையில் தரைதளத்தில் அரசுடைமை வங்கி மற்றும் ஏடிஎம் மையம் உள்ளது. மேலும் முதல் தளத்தில் தனியார் இன்சூரன்ஸ் வங்கி செயல்படுகிறது. இந்நிலையில் தரை தளத்தில் உள்ள வங்கியில் நேற்று இரவு 8.30 மணியளவில் லாக்கர் ரூம் அருகே உள்ள எலக்ட்ரிக் மீட்டர் பொருத்தப்பட்ட அறையில் இருந்து திடீரென்று கரும்புகை வந்தது. இதைப் பார்த்த வங்கி ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே வந்தனர். தகவல் அறிந்து 3 தீயணைப்பு வண்டிகளில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
கரும்புகை அதிக அளவு வெளியேறியதால் தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சுத் திணறல், கண்ணெரிச்சல் ஏற்பட்டது. மேலும் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் புகையை கட்டுப்படுத்த புகை போக்கியை பயன்படுத்தினர். புகைமூட்டத்தால் வங்கிக்குள் செல்ல முடியாததால் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டிக் கொண்டு உள்ளே சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வங்கியில் இருந்த பேப்பர்கள், சில படிவங்கள் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.