சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்க கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்தும் அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து அவர் புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர், நீதிமன்ற காவலை ஜனவரி 22ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், தனக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆவணங்களை அமலாக்கத்துறை திருத்தம் செய்துள்ளதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யும் நோக்கத்தில் விதிகளை மீறி போலியாக ஆவணங்கள் அமாலக்கதுறை தயாரித்தும், திருத்தியும் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களை முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது எனவும் மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் புதிய மனு தொடர்பாக அமலாக்கத்துறை ஜனவரி 22-க்குள் பதில் அளிக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார். இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனுவை கடந்த முறை வாபஸ் பெற்ற நிலையில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜன.22-ல் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு:
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஜன.22-ல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளது. செந்தில் பாலாஜியை ஜன.22-ல் நேரில் ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.