சென்னை :விசாரணை என்ற பெயரில் செந்தில் பாலாஜியை வீட்டிற்குள்ளேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் அடைத்து வைத்து இருந்தனர் என்று திமுக எம்.பி.என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கைது நடவடிக்கைக்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.அந்த வரிசையில்
திமுக எம்பி இளங்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது,”அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்ற எந்த தகவலை அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை. அவர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம்.அதற்கான எந்த விதிகளையும் அமலாக்கத்துறை பின்பற்றவில்லை. எந்த வழக்குக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றுள்ளனர் என்று தெரியவில்லை.செந்தில் பாலாஜியை பார்ப்பதற்கு உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள் என யாரையும் அமலாக்கத்துறையினர் அனுமதிக்கவில்லை.விசாரணை என்ற பெயரில் செந்தில் பாலாஜியை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்து இருந்தனர் அமலாக்கத்துறை அதிகாரிகள்.அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்.செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்,”என்றார்.