டெல்லி: அமலாக்கத்துறைக்கு எதிராக தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.கவிதாவை அமலாக்க துறையினர் கடந்த 15ம் தேதி கைது செய்தனர். இந்த கைதை அடுத்து அவரை உடனடியாக டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தவும் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற டெல்லி நீதிமன்றம் அவரை மார்ச் 23 வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் அவரை கைது செய்ய கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனிடையே அவரது மனு 19ம் தேதி விசாரணைக்கு வரக்கூடிய சூழலில் அவர் திடீரென கைது செய்யப்பட்டது குறித்து விசாரணை நீதிமன்றத்தில் கேள்வியை நீதிபதி என்.கே.நாக்பால் எழுப்பியிருந்தார். இந்நிலையில் தனது கைது சட்ட விரோதமானது என்றும் கைதை ரத்து செய்து தன்னை விடுவிக்க கோரியும் கவிதா சார்பில் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.