Thursday, May 16, 2024
Home » காட்டில் தண்ணீர் பிடிக்க சென்றபோது யானை மிதித்து வாலிபர் பலி : அருமனை அருகே பரிதாபம்

காட்டில் தண்ணீர் பிடிக்க சென்றபோது யானை மிதித்து வாலிபர் பலி : அருமனை அருகே பரிதாபம்

by Arun Kumar

அருமனை: தண்ணீர் பிடிக்க சென்றபோது காட்டுயானை மிதித்து வாலிபர் உயிரிழந்தார். குமரி மாவட்டம் ஆறுகாணி அருகே ஒருநூறாம்வயலில் கீழ் மலைவீடு என்னும் மலை கிராமத்தில் வசித்து வருபவர் குஞ்சுராமன் காணி. இவரது மகன் மது (26). கூலி தொழிலாளி. இவர்களது வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கால்வாய் செல்கிறது. இங்கிருந்து குழாய் மூலம் எடுக்கப்படும் குடிநீரை சேகரிப்பதற்காக நேற்று மாலை மது உட்பட அப்பகுதியை சேர்ந்த 5 பேர் சென்றபோது அங்கு கூட்டமாக நின்றிருந்த காட்டு யானைகள் 5 பேரையும் விரட்டியது. 4 பேர் தப்பிய நிலையில், மதுவை யானைகள் மிதித்து கொன்றது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் களியல் வனச்சரக குழுவினர் சென்றனர். ஆனால் யானைகள்பிளிறிக்கொண்டு அங்கேயே நின்றதால் உடல் அருகே செல்லமுடியவில்லை. இரவு 10 மணியளவில் யானைகள் அந்த இடத்தை விட்டு விலகியதும் வனத்துறையினர் சென்று மதுவின் உடலை மீட்டு கீழே கொண்டு வந்தனர். இதன்பின்னர் அங்கு தயாராக நின்ற ஆம்புலன்ஸ் வாகனத்தில் மதுவின் உடலை ஏற்றவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘‘கிராமத்தில் முறையான குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்திருந்தால் மது உயிரிழந்திருக்க மாட்டார்.

எனவே குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்று மக்கள் கோஷமிட்டனர். அவர்களிடம் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘‘மதுவின் இறுதி சடங்கிற்காக ரூ.50 ஆயிரம் வழங்குவதாகவும் உடற்கூறு ஆய்வில் யானை மிதித்து மது இறந்ததாக உறுதி செய்யப்பட்டால் அவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள்போராட்டத்தை கைவிட்டனர். இதன்பிறகு மதுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

two × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi