செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தநிலையில், அனுமதி பெற்ற துப்பாக்கிகளை விஐபிக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையாளர்கள், காவல் நிலையத்தில் ஒப்படைத்து வருகின்றனர். இதுவரை 134 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு காவல் மாவட்டம், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் காவல்துறை முன் அனுமதியோடு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், முக்கிய விஐபிக்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், இவர்கள் அனைவரும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்களது துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த உடன் அவரவர் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து துப்பாக்கி உரிமம் வைத்துள்ள தொழிலதிபர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்து வருகின்றனர். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் நிலைய பகுதியில் உள்ள 108 துப்பாக்கிகளும், மறைமலை நகர் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 26 துப்பாக்கிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் வங்கி பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.