Friday, May 17, 2024
Home » சென்னை எல்லை சாலை திட்டத்திற்காக பூஞ்சேரி முதல் எண்ணூர் வரை நில அளவீடு பணிகள் தீவிரம்: 133 கி.மீ தூரத்துக்கு 200 அடி சாலையாக அமைகிறது

சென்னை எல்லை சாலை திட்டத்திற்காக பூஞ்சேரி முதல் எண்ணூர் வரை நில அளவீடு பணிகள் தீவிரம்: 133 கி.மீ தூரத்துக்கு 200 அடி சாலையாக அமைகிறது

by Arun Kumar

மாமல்லபுரம்: சென்னை எல்லை சாலை திட்டத்தில், பூஞ்சேரி முதல் எண்ணூர் வரை 200 அடி சாலை அமைக்க, நில அளவீடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக, மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தவிர்ப்பதற்காக, எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை 4 முனை சந்திப்பு வரை 200 அடி சாலை அமைய உள்ளதாக சட்டப்பேரவையில், கடந்த 2020ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியானது.

இந்த சாலை திட்டம் ரூ.6,175 கோடி செலவில் அமைக்க, தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன் ஆட்சி முறை ஒப்புதல் அளித்திருந்தது. தென் மாவட்டங்களில் இருந்து எண்ணூர் துறைமுகத்திற்கு சரக்கு பெட்டக வாகனங்கள் செல்வதற்கு உதவியாக இந்த 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த சாலையின் மொத்த நீளம் 133 கிலோ மீட்டர். இதில் 97 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்கப்படுகிறது. 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே இருக்கும் சாலை பலப்படுத்தப்பட உள்ளது. இந்த சுற்றுவட்ட சாலை எண்ணூர் துறைமுகத்தில் ஆரம்பித்து மாமல்லபுரத்தில் முடிகிறது. எண்ணூரில் தொடங்கி காட்டுப்பள்ளி, புதுவாயல், பெரியபாளையம், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், சிங்கபெருமாள் கோவில் வழியாக மாமல்லபுரம் வரை செல்கிறது.

இத்திட்டத்தை பரிசீலித்த தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம், இதற்கு அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் அதை தொடர்ந்து, ஒன்றிய சுற்றுச்சூழல் துறை கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. இந்த சாலை பணிக்காக, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதியில் நில அளவீடு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், சில நிர்வாக காரணங்களுக்காக அப்பணி திடீரென கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி பகுதியில் மீண்டும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் நில அளவீடு தொலைநோக்கு கருவி மூலம் நில அளவீடு பணியை நேற்று தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து நில அளவீடு செய்யும் அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னை பெருநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தவிர்க்க, சென்னை எல்லை சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த, திட்டம் மூலம் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள்கோவில் வழியாக மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி இசிஆர் சாலை சந்திப்பு வரை 200 அடி சாலை அமைய உள்ளது. இதில், ஏற்கனவே சாலைகள் உள்ள இடங்களில் சாலை அகலபடுத்தும் பணியும் நடக்கும். மேலும், பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்கு இடையூறு ஏற்படாமல் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, நில அளவீடு பணி துரிதமாக நடக்கிறது. தொடர்ந்து, அரசிடம் முறையான அனுமதி பெற்று, நிலம் கையகப்படுத்தப்படும். இதற்காக, நிலத்தின் உரிமையாளர்களுக்கு வங்கி கணக்கு மூலம் பணம் செலுத்திய பிறகு நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கும்’ என்றனர்.

* 349 பாலங்கள்

இந்த புதிய சாலையில் 5 பெரிய பாலங்கள், 20 சிறிய பாலங்கள், 324 தரைப்பாலங்கள், 49 சுரங்க வழிகள், 4 மேம்பாலங்கள், 3 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. 81 கிராமங்கள் வழியே, 77 கி.மீ தூரத்திற்கு விவசாய நிலங்கள் வழியாகவும், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வனப்பகுதி வழியாகவும் இந்த சாலை அமைய உள்ளது.

* 4,797 மரங்கள் அகற்றம்

இந்த சாலை பணிக்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் கொண்டமங்கலம், செங்குன்றம் ஆகிய இடங்களில் 25 ஏக்கர் வனப்பகுதி கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள இடங்களில் இருக்கும் 4,797 மரங்களில் 2,168 மரங்கள் பாதிக்காதபடியும், 2,629 மரங்கள் வேரோடு இடமாற்றமும் செய்யப்படும் என திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* நிபந்தனைகள்

இந்த சாலை திட்டத்திற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் துறை கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதில் முக்கியமான நிபந்தனைகளாக, “தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற வேண்டும். புதிதாக அமைக்கப்படும் சாலை குளங்கள், ஏரிகளை பாதிக்கக் கூடாது. கடற்கரை ஒழுங்காற்று மண்டல பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்கக் கூடாது. சாலை அமைக்கப்பட உள்ள கடலோர பகுதிகளுக்கு அருகில் மாங்குரோவ் மரங்கள் நட வேண்டும். சாலையை ஒட்டி பனைமரங்கள் நட வேண்டும். மீனவ மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

twelve − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi