நீலகிரி தொகுதி போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு பரப்புரை மேற்கொண்டார். அப்போது, வாகனத்தில் இருந்த படியே வேட்பாளருக்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது, அவர் பேசுகையில், ‘பாஜ கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசன், தினகரன் உள்ளிட்டோருக்கு அவர்கள் கேட்ட சின்னம் கிடைக்கிறது.
ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு கர்நாடகாவில் உள்ள கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளரை திட்டமிட்டு நிறுத்தி எங்களது வேட்பாளருக்கு முன்னேயோ, பின்னேயோ அந்த சுயேட்சையின் சின்னம் வருவது போல் செய்து வாக்காளர்களை குழப்பி நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை சிதறடிக்க முயற்சி நடக்கிறது.
எங்களை கண்டால் அவ்வளவு பயம். தற்போது நடக்கும் தேர்தல் பிரதமர் தேர்தல் அல்ல. புரோக்கர் பதவிக்கான தேர்தல். பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு நிறுவனங்களுக்கும் தரகு வேலை பார்க்கும் புரோக்கர் பதவிக்கான தேர்தல் தான் இது. பிரதமர் மோடி ஒரு முறை பத்திரிகையாளரை சந்தித்துவிட்டால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன்’ என்றார்.