சென்னை: திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததால் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தமிழக அரசிதழில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் புகழேந்தி. இவர் கடந்த 5ம் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், மேடையில் மயங்கி விழுந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் 6ம் தேதி தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் 7ம் தேதி அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதுகுறித்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு அந்த மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்பினார். அவர் இந்திய தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான அறிவிப்பை தமிழக சட்டப்பேரவை செயலகமும் வெளியிட்டது. இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக நேற்று தமிழக அரசிதழில் அதிகாரப்பூர்வமாக சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ளார். ஒரு தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையும் ஜூன் 1ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் சேர்த்து நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.