சென்னை : திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன்அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் களைகட்டியுள்ளன. இந்த நிலையில், அற்ப காரணங்களுக்காக தேர்தல் ஆணையம் திமுக விளம்பரங்களை நிராகரிப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் ஆணையம் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்துள்ள வழக்கு திங்களன்று விசாரணைக்கு வருகிறது.
முக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், “தேர்தல் ஆணைய விதிப்படி விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பத்தை 2 நாட்களில் பரீசிலித்து அனுமதி தரவேண்டும். ஆனால் திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிக்க தேர்தல் ஆணையம் 6 நாட்கள் வரை காலதாமதம் செய்கிறது. திமுகவின் சில விளம்பரங்களை அற்ப காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் நிராகரிக்கவும் செய்கிறது. தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் செயல்படவேண்டும். திமுக விளம்பர முன் அனுமதி விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார் தமிழகத் தேர்தல் அதிகாரி. தமிழகத் தேர்தல் அதிகாரி நிராகரித்ததை ரத்து செய்து திமுக விளம்பரங்களை அனுமதிக்க உரிய உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.