Friday, May 17, 2024
Home » ஓட்டுப்போட வந்த முதியவர்கள் 3 பேர் மயங்கி விழுந்து சாவு

ஓட்டுப்போட வந்த முதியவர்கள் 3 பேர் மயங்கி விழுந்து சாவு

by Ranjith

சேலம்: வாக்களிக்க வந்த 3 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பழைய சூரமங்கலம் பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி (65). ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர். இவர் தனது மனைவி கமலாவுடன் நேற்று காலை அங்குள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு, வாக்களிக்க வந்தார். அப்போது, வரிசையில் நின்றிருந்த பழனிசாமி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பழனிசாமி இதய நோயாளி என்பதால், மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகேயுள்ள கொண்டையம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மனைவி சின்னபொண்ணு(77). இவர் நேற்று, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியில், செந்தாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்தார்.

பின்னர் வாக்குச்சாவடி அலுவலர் சின்னபொண்ணுவின் கை விரலில் அழியாத மையை வைத்தார். அப்போது, திடீரென சின்னபொண்ணு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி, திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ்(72). இவரை அவரது மகன் ஸ்ரீதர் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க அப்பகுதியில் உள்ள வாக்குச் சாவடி எண்: 269க்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது வாக்குச்சாவடி மையத்திற்கு உள்ளே வந்த கனகராஜ் வாக்களிக்க செல்லும் பொழுது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்ற வந்த 3 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* வாக்களிக்க சென்ற புதுமாப்பிள்ளை பலி
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பெரும்பாலை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் தினேஷ்(25). ஆந்திர மாநிலம், தடா பகுதியில் உள்ள தனியார் ஏர்கூலர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணமாகி தமிழழகி என்ற மனைவி உள்ளார். தேர்தலையொட்டி சொந்த ஊரில் வாக்களிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு தினேஷ் தனது பைக்கில் வேலூர் வழியாக தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தார்.

தொடர்ந்து, நேற்று அதிகாலை பள்ளிகொண்டா அடுத்த கூத்தம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறியது. பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

You may also like

Leave a Comment

thirteen + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi