சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பசுந்தேயிலையை நம்பியே உள்ளது. தொடர்ந்து பசுந்தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், 85 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.33.50 நிர்ணயம் அரசு செய்திட வேண்டும். சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் நாக்குபெட்டா படுகர் நல சங்கத்தின் பிரதிநிதிகளை அரசு நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். மேலும், ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு ரூ. 10 மானியமாக வழங்கிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.