சென்னை : ஓபிஎஸ் என்ற பெயரில் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பாக எடப்பாடி தரப்பு மீது ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் குற்றம் சாட்டியுள்ளார். ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “சூழ்ச்சிகார எடப்பாடி கும்பலின் அல்லக்கைகள் ஒரு சிலர், ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 நபர்களை தமிழ்நாடு முழுவதும் இருந்து வரவழைத்து களத்தில் இறங்கியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது; “ஓ.பன்னீர்செல்வம் திங்களன்று ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவர் மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரும் வழிநெடுகிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் மக்கள் வரவேற்றனர்.
அதனை கேள்விப்பட்ட சூழ்ச்சிகார எடப்பாடி கும்பலின் அல்லக்கைகள் ஒரு சிலர், ஓ.பன்னீர்செல்வம் பெயரில் பெயரில் 5 நபர்களை தமிழ்நாடு முழுவதும் இருந்து வரவழைத்து களத்தில் இறங்கியுள்ளது. அந்த அப்பாவிகளை கொண்டு வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். எங்களது ராமநாதபுரம் மக்களை எந்த அளவுக்கு நீங்கள் நினைத்திருக்கிறீர்கள்? அவர்களை என்ன முட்டாளாக நினைக்கிறீர்களா?
எங்கள் மக்கள் மிகவும் தெளிவாக தர்மத்தின் பக்கமும், நியாயத்தின் பக்கமும் வாக்களிக்கக்கூடியவர்கள், அவர்களின் வாக்கு அடுத்த மாதம் 19ம் தேதியில் எதிரொலிக்கும். அதனுடைய முடிவு இரு மாதங்களுக்கு பிறகு தெரியவரும்போது, உங்களுடைய சூழ்ச்சிக்கார கும்பலின் முகத்தில் கரியை பூசுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கூறியுள்ளார்.