புதுடெல்லி: அதிமுக சட்ட விதிகளை மீறி எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீ திமன்றம் ஆகியவற்றில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த இடைக்கால மனுவில், “மக்களவை தேர்தல் வேட்பாளர் சின்னம் ஒதுக்கீடு படிவத்தில், எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும்.
நீதிமன்றங்களில் இருக்கும் வழக்கில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்கப்படும் பட்சத்தில் அவர் கையொப்பமிடப்பட்ட தேர்தல் படிவங்களும் செல்லாத ஒன்றாக ஆகிவிடும். ஏற்கனவே கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போதும் அதேநிலை நீடிக்கும் வகையில் ஒரு உத்தரவை விரைந்து நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.