பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்தகவுடாவுக்கு அவர் வழக்கமாக போட்டியிடும் பெங்களூரு வடக்கு தொகுதியில் பாஜ சீட் வழங்கவில்லை. இதனால் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கும் கவுடா, இரண்டொரு நாளில் காங்கிரசில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையில் டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் சதானந்தகவுடாவை கட்சியில் சேர்த்து கொள்வது தொடர்பாக கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சித்தராமையா, ‘கடந்த சட்டப்பேரவை தேர்தலி்ன் போது, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசில் சேர்த்து சீட் கொடுத்தோம். அவர் தோல்வியுற்றார். இருந்தும் மேலவை உறுப்பினர் பதவி வழங்கினோம். ஆனால் நமது நம்பிக்கையை காப்பாற்றாமல் மீண்டும் பாஜவில் இணைந்து, நமக்கு அவமதிப்பு ஏற்படுத்தினார். அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் வளர்ந்தவர்.
அந்த வகையில் டி.வி.சதானந்தகவுடாவும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் வளர்ந்தவர். அவரை நமது கட்சியில் சேர்த்து கொண்டால், ஜெகதீஷ்ஷெட்டரை போல், அவரும் மீண்டும் பாஜவுக்கு செல்லமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம். எனவே அவரை கட்சியில் சேர்க்கும் முடிவை கைவிடலாம்’ என்றார். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியில் இணையும் திட்டம் இல்லை என்று சதானந்தகவுடா அறிவித்துள்ளார்.