மதுரை: எடப்பாடி பழனிசாமியின் அருமை மோடி, அமித்ஷாவுக்கு தெரிகிறது, அண்ணாமலைக்கு தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: மதுரை மாநாடானது இதற்கு முன்பும், பின்பும் யாரும் நடத்திடாத, நடத்த முடியாத அளவிற்கு பெரியதொரு மாநாடாக அமையும். ஓபிஎஸ், குறித்து நான் விமர்சித்த அந்த வார்த்தைகள் நான் சொன்னது அல்ல. இதற்கு முன்னால் பலரும் கட்சியை விட்டு வெளியேறியபோது ஜெயலலிதா குறிப்பிட்டது.
அதிமுக என்ற கோயிலுக்குள் இருக்கும் வரை அவர்கள் கல்லாக இருந்தாலும் மதிப்போம். கோயிலுக்குள் இருந்து வெளியே வந்துவிட்டால், அவர்களை மிதித்து விட்டு சென்று விடுவோம். அண்ணாமலை பாஜவின் மாநில தலைவர், ஜஸ்ட் லைக். அவ்வளவு தான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. அவர்களுக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை? இவ்வாறு அவர் கூறினார்.