சென்னை: சென்னை, சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட அப்பாவு நகர், பன்னீர்செல்வம் நகர், காரணீஸ்வரர் நகர், ஜாபகர்கான் பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், மடுவின்கரை, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் அப்போலோ, எம்ஜிஎம், காவேரி, ராமச்சந்திரா, கற்பக விநாயகா, பில்ரோத் ஆகிய 7 தனியார் மருத்துவமனைகள் பங்கேற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தற்போது டெங்கு பாதிப்பு 7,662 நபர்களுக்கு மட்டுமே. அதில் 10 நபர்கள் இறந்து உள்ளனர். கடந்த ஆட்சியில் அல்லது கடந்த காலத்தில் ஆண்டுதோறும் 10,000க்கு மேல் பாதிக்கப்படுவார்கள் ஆனால் இந்த ஆண்டு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.
அதிமுக ஆட்சியில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. நாடாளுமன்றத்திலேயே 2015 வெள்ளத்தை, ‘மனித தவறால் ஏற்பட்ட வெள்ளம்’ என்று சொல்லப்பட்டது. நடவடிக்கை எடுத்து இருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்க மாட்டார்கள், லட்சக்கணக்கான சொத்துகள் வீணாகி இருக்காது, கோடிக்கணக்கான மக்கள் மாடிமேல் உணவுக்காக காத்திருந்திருக்கமாட்டார்கள், 10 நாள் மின்சாரம் இல்லாத நிலை இருக்காது. அதனால் இந்த அரசைப் பற்றி குறை கூற எடப்பாடிக்கும், ஜெயகுமாருக்கும் எந்த தார்மீக உரிமையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.