Monday, May 27, 2024
Home » கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் ரூ.4276 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்: தினமும் 400 மில்லியன் லிட்டர் தயாரிக்க முடிவு; சென்னையில் 22 லட்சம் பேர் பயனடைவர்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் ரூ.4276 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்: தினமும் 400 மில்லியன் லிட்டர் தயாரிக்க முடிவு; சென்னையில் 22 லட்சம் பேர் பயனடைவர்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

by Karthik Yash

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை பேரூரில், ரூ.4,276 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டப்பணிகளுக்கு 23.2.2010ல் அன்றைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது சீரான முறையில் இயங்கிவரும் இந்நிலையத்தின் மூலம், தென்சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, பள்ளிப்பட்டு, அடையாறு, பெசன்ட் நகர், நந்தனம், எம்.ஆர்.சி. நகர், ராஜாஅண்ணாமலைபுரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். மேலும், நெம்மேலியில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் வளர்ச்சியை தொடர்ந்து சென்னைக்கு அருகாமையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாலும், பெருகிவரும் வளர்ச்சிக்கேற்ப எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு போதுமான அளவில் குடிநீர் வழங்கும் பொருட்டும், பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டினார்.

இது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமைய உள்ளது. இந்நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2026க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்நிலையத்தில், கடல்நீரை குடிநீராக்க 1150 மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள் HDPE குழாய்கள் பதிக்கப்படும். மேலும், இந்நிலையத்தில் அமைக்கப்பட உள்ள நீர் கரைந்த காற்று அலகுகள் மற்றும் இரட்டை ஈர்ப்பு மணல் வடிகட்டி அலகுகள் மற்ற வழக்கமான நிலையங்களைவிட நவீன முறையில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த அலகுகள் மூலம் கடலில் உள்ள கசடுகள் (மிதப்பவை, துகள்கள்) அகற்றிய பின்னர் கடல்நீரை குடிநீராக்கும் திறனை நிலையாக பெறும் வகையில் வடிவமைக்கப்படும். மேலும், இந்நிலையத்தில் இருந்து போரூர் வரை 59 கி.மீ. நீளத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்படும்.

இந்த நிலையத்தின் மூலம், சென்னை மாநகராட்சி பகுதிகள், தாம்பரம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு அருகாமையில் உள்ள 20 ஊராட்சி பகுதிகளில் உள்ள 22.67 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்குமார், சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் துணை தூதர் தாகா மசாயுகி, இந்தியாவிற்கான ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் தலைமை அலுவலர் சைட்டோ மிட்சுனோரி, வி.எ.டெக் வபாக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜீவ் மிட்டல் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* முதல் சுத்திகரிப்பு நிலையம் கலைஞர் திறந்து வைத்தார்
மீஞ்சூரில் கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் வளர்ந்து வரும் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை வடிவமைத்து, நிறுவி, இயக்கி மற்றும் திருப்பி தரும் அடிப்படையில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு அன்றைய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சரான முதல்வர் மு.க.ஸ்டாலினால் 25.2.2007 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிலையத்தின் கட்டுமான பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப்பெற்று, அன்றைய முதல்வர் கலைஞரால் 31.7.2010 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்தில் இருந்து கிடைக்கக்கூடிய குடிநீர் மூலம், வடசென்னை பகுதிகளான மணலி, மாதவரம், எண்ணூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

You may also like

Leave a Comment

2 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi