Thursday, May 16, 2024
Home » சபரிமலையில் போதிய வசதிகள் இல்லாததால் தரிசனம் செய்யாமல் திரும்பிய பக்தர்கள்: ஏடிஜிபி நேரில் ஆஜராக கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

சபரிமலையில் போதிய வசதிகள் இல்லாததால் தரிசனம் செய்யாமல் திரும்பிய பக்தர்கள்: ஏடிஜிபி நேரில் ஆஜராக கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

by Dhanush Kumar

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனறு புகார்கள் வந்ததை தொடர்ந்து பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி நேரடியாக சபரிமலை செல்ல வேண்டும். இது குறித்து ஏடிஜிபி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களாக மிக அதிகமாக உள்ளது. ஆனால் போதிய வசதிகள் செய்யப்படாததாலும், பக்தர்களை கட்டுப்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டும், போலீசாரும் ஆர்வம் காட்டாததாலும் பக்தர்கள் கடந்த சில நாட்களாக அவதியடைந்து வருகின்றனர். கடந்த வருடம் வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கேரள போலீசிடம் இருந்தது.

இந்த வருடம் முதல் ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது. இது போலீசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வருடம் வரை பல நாட்கள் தினசரி 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்தபோதிலும் அதிகமாக எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. நடை சாத்தப்பட்டிருக்கும் நேரங்களில் 18ம் படி ஏற போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் தற்போது நடை சாத்தப்பட்டுள்ள சமயங்களில் 18ம் படி ஏற அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தினமும் 6 முதல் 18 மணிநேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவர்களுக்கு முறையாக குடிநீர், உணவு வசதி கூட தேவசம்போர்டு செய்து கொடுக்கவில்லை. இதனால் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த குழந்தைகள் உள்பட பக்தர்கள் மயக்கமடைந்தனர். இது குறித்து அறிந்த கேரள உயர்நீதிமன்றம், பக்தர்களுக்கு உடனடியாக வசதிகள் செய்து தர வேண்டும் என்று பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டருக்கும், கேரள டிஜிபிக்கும் உத்தரவிட்டது. மேலும் தரிசன நேரத்தை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதனால் நேற்று முன்தினம் முதல் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிந்தனர். வெள்ளி முதல் ஞாயிறு வரை 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று 75 ஆயிரத்திற்கு அதிகமான பக்தர்கள் தரிசித்தனர். பெருமளவு பக்தர்கள் வந்த நிலையில் எந்த வசதியும் செய்யப்படாததால் ேநற்றும் 10 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பினர். சபரிமலையில் தற்போது ஏற்பட்டு உள்ள பிரச்னைகளுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டும், போலீசும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் கேரள உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றது. இது குறித்து விசாரித்த தேவசம்போர்டு ெபஞ்ச் பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி உடனடியாக சபரிமலை சென்று நிலைமையை கண்காணிக்க உத்தரவிட்டது. மேலும் பக்தர்களுக்கு என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க சட்டம் ஒழுங்கு ஏடிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

four + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi