Thursday, May 16, 2024
Home » போதை பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் திரைப்பட இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக், நண்பரின் வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை: வங்கி பண பரிவர்த்தனை பற்றி அமலாக்கத்துறை விசாரணை; ஹாட் டிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்

போதை பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் திரைப்பட இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக், நண்பரின் வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை: வங்கி பண பரிவர்த்தனை பற்றி அமலாக்கத்துறை விசாரணை; ஹாட் டிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்

by Karthik Yash

சென்னை: வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்திய விவகாரத்தில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் நடந்ததாக திரைப்பட இயக்குநர் அமீர், வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் நண்பர்கள் வீடு, அலுவலகங்கள் என சென்னை முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் கிடைத்த வங்கி பரிவர்த்தனை ஆவணங்களை ைவத்து இயக்குநர் அமீரிடம் அதிகாரிகள் நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.

இந்தியாவில் இருந்து ஊட்டச்சத்து உணவு பொருட்கள் ஏற்றுமதி என்ற பெயரில் சர்வதேச நாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு உயர் ரக போதை பொருள் மூலப்பொருட்களை கடத்திய வழக்கில், சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாபர் சாதிக் அளித்த தகவலின் படி, அவரது நெருங்கிய நண்பரான சதா(எ)சதானந்த் என்பவர் கடந்த மாதம் 12ம் தேதி கைது செய்யப்பட்டார். பிறகு கடந்த மாதம் 18ம் தேதி ஜாபர் சாதிக்கை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து வந்து நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

அதில் போதை பொருட்கள் விற்ற பணத்தை பெருமளவில் திரைப்படம் எடுப்பதற்கும், புதிய ஓட்டல்கள், டீ ஷாப் திறந்ததற்கும் முதலீடு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதைதொடர்ந்து ஜாபர் சாதிக் தயாரித்த திரைப்படங்களை இயக்கிய நெருங்கிய நண்பரான திரைப்பட இயக்குநர் அமீர் மற்றும் தொழிலதிபர்களான அப்துல் பாசித் புகாரி, சயத் இப்ராகிம் ஆகியோருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2ம் தேதி டெல்லியில் உள்ள போதை தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் இயக்குநர் அமீர், தொழிலதிபர் அப்துல் பாசித் புகாரி, சயத் இப்ராகிம் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அப்போது இயக்குநர் அமீர் இந்த வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், எப்போது அழைத்தாலும் நேரில் வந்து விளக்கம் அளிப்பதாகவும் தெரிவித்தார். இதுவரை நடந்த விசாரணையில், ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்து இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் இந்த வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடங்கி உள்ளது.

அதன் முதற்கட்டமாக சட்டவிரோத பணபரிமாற்றம் சட்டத்தின் கீழ் தனியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர். அதன்படி போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது நெருங்கிய நண்பரும், இயக்குநருமான அமீர், அப்துல் பாசித் புகாரி, சயத் இப்ராகிம், ரகு உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என சென்னை முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் தீவிர சோதனை நடத்தினர்.

குறிப்பாக சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, புரசைவாக்கம் பகுதியில் உள்ள ஜே.எஸ்.எம், ஓட்டல், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது ஓட்டல்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள டீ ஷாப் மற்றும் தி.நகர் ராஜன் தெருவில் உள்ள திரைப்பட இயக்குநர் அமீர் அலுவலகம் மற்றும் சேத்துப்பட்டு முத்தார் கார்டனில் உள்ள அவரது வீடு, அடையார் சாஸ்திரிநகரில் உள்ள புகாரி ஓட்டல், அதன் உரிமையாளரான அப்துல் பாசித் புகாரி வீடு, பல்வேறு தொழில் பாட்னராக இருந்த சயத் இப்ராகிம் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது. ேமலும், ஜாபர் சாதிக் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர்கள், ஊழியர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது.

அதேபோல், ஜாபர் சாதிக் தயாரிப்பு நிறுவனம் பணம் உதவி மூலம் எடுக்கப்பட்ட ‘ஜாக்கி’ என்னும் திரைப்படத்திற்கு கணக்காளராக பணியாற்றிய கொடுங்கையூர் ராம் நகரை சேர்ந்த ரகு வீடு மற்றும் சென்னை, புறநகர் பகுதிகள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், போதை பொருட்கள் விற்பனை மூலம் கிடைத்த கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணத்தை ஜாபர் சாதிக் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட பணம் குறித்த விபரங்கள், பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யப்பட்ட விபரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் மூலம் எடுத்த திரைப்படத்திற்காக செலவு செய்யப்பட்ட கணக்குகள், அதற்காக அமீருக்கு வழங்கப்பட்ட ஊதிய கணக்கு விபரங்கள் அடங்கிய ஹாட் டிஸ்க், பென் டிரைவ், வங்கி கணக்கு விவரங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜாபர் சாதிக் நடத்தும் ஓட்டல்கள் மற்றும் டீ ஷாப்புகளில் நடந்த சோதனையில் கணினி உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையில் இயக்குநர் அமீர் வீடு, அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட வங்கி தொடர்பான ஆவணங்களை வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அமீரிடம் நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். அதற்கு அவர் அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை, திரைப்பட வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

three × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi