Tuesday, May 21, 2024
Home » எழும்பூர், வியாசர்பாடி கணேசபுரம் பகுதிகளில் தண்டவாளத்தின் குறுக்கே வடிகால் பணி: ரயில் சேவை பாதிக்க வாய்ப்பு

எழும்பூர், வியாசர்பாடி கணேசபுரம் பகுதிகளில் தண்டவாளத்தின் குறுக்கே வடிகால் பணி: ரயில் சேவை பாதிக்க வாய்ப்பு

by Ranjith

அம்பத்தூர்: எழும்பூர், வியாசர்பாடி கணேசபுரம் பகுதிகளில் தண்டவாளத்தின் குறுக்கே, மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ரயில் சேவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சில வெள்ளத்தடுப்பு திட்டங்கள், ரயில்வே பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களால் இதுவரை முடிக்கப்படவில்லை. குறிப்பாக, ரயில்ேவ தண்டவாளத்தின் குறுக்கே வடிகால் அமைப்பதில் சிக்கல் நீடித்தது. குறிப்பாக, ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே வெள்ளநீர் செல்லும் வகையில் வடிகால் அமைப்பதற்காக, சென்னையில் 23க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆனால் இந்த திட்டங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை. தேவையான அனுமதியை பெறுவதில் உள்ள சிரமம் காரணமாக சில முன்மொழிவுகள் கிடப்பில் போடப்பட்டன.இந்நிலையில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் செயலர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே, வடிகால் பணிகள் தாமதமான பகுதிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், எழும்பூர் மற்றும் கணேசபுரம் போன்ற பகுதிகளில், தண்டவாளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் வெள்ள நீரை திருப்பிவிட, மழைநீர் வடிகால் மற்றும் கல்வெட்டுகள் கட்டும் பணியை மாநகராட்சி அடுத்த வாரம் தொடங்க உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை அருகே தண்டவாளத்துக்கு கீழே பெட்டி கல்வெட்டு 45 நாட்களில் அமைக்கப்படும். இதற்காக, பின்பற்ற வேண்டிய முறை புஷ்-த்ரூ தொழில்நுட்பம் மற்றும் வரைபடங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. பணிகளை விரைந்து தொடங்க உள்ளோம். ஆனால் பணி அமலாக்கத்தின் போது ரயிலின் வேகம் குறைக்கப்படும். லைன் பிளாக் புறநகர் ரயில் சேவைகளை பாதிக்கலாம். சில ரயில்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதேபோல், எழும்பூர் ரயில் நிலையம் அருகே காந்தி இர்வின் சாலை பாலம் வழியாக மற்றொரு பெட்டி கல்வெட்டு அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இங்கு, நெடுஞ்சாலைத்துறையின் பணிகள் நிறைவடைந்துள்ளன. வடிகால் கட்டுமானத்தின் 90% நீளம் நிறைவடைந்துள்ளது. ஆனால் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே சுமார் 50 மீட்டர் தூர்வாரும் கால்வாய் அமைக்கப்படவில்லை. கடந்த பருவமழையில், அப்பகுதியில் வெள்ளப்பெருக்கை குறைக்க, பம்புகளை பயன்படுத்தினோம். தற்போது கட் அண்ட் கவர் முறையில் வாய்க்கால் அமைத்து நிரந்தர தீர்வு காணப்பட உள்ளது. வடிகால் அமைக்க கிரேன்களை பயன்படுத்துவோம்,” என்றார்.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘தினமும் 621 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் சில ரயில்கள், அதற்கு பதிலாக எழும்பூரில் இருந்து இயக்கப்படும். ரயில்களின் வேகம் குறைந்தது 6 நிமிட தாமதத்திற்கு வழிவகுக்கும். இதேபோல், சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் மணிக்கு 110 கிமீ முதல் 20 கிமீ வரை குறைக்கப்படலாம். எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை தினமும் 220 ரயில்கள் இயக்கப்படுகின்றன. எழும்பூரில் மாநகராட்சி பணிகளை மேற்கொள்ளும்போது, இந்த சேவைகள் பாதிக்கப்படலாம். இதுதொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படும்,’’ என்றார்.

You may also like

Leave a Comment

14 − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi