புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு முன்னாள் முதல்வராக இருந்த பாஜ.வை சேர்ந்த வசுந்தரா ராஜே கடந்த 2020ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஒப்புக் கொள்ளவில்லை என்று முதல்வர் கெலாட் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசியிருந்தார். இதையடுத்து வசுந்தராவை பாஜ ஓரம் கட்டியுள்ளது. வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கெலாட், “ராஜஸ்தானில் நடைபெற உள்ள தேர்தலை 3வது முறையாக தனது தலைமையில் நடத்த தலைமை தேர்ந்தெடுத்துள்ளது. இங்கு சீட் ஒதுக்குவதில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடில்லை. எனது தலைமையிலான ஆட்சியை பண அதிகாரத்தின் மூலம் கவிழ்க்க ஆதரவு அளிக்காததால் முன்னாள் முதல்வர் வசுந்தராவை பாஜ ஓரம் கட்டியுள்ளது. என்னால் அவரை தண்டித்து விட வேண்டாம்,” என்று கேட்டுக் கொண்டார்.