உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் நகராட்சி ஆணையரின் காணாமல் போன நாயை தேட பெரிய போலீஸ் படையே களமிறக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. ராமன் ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும் படத்தில் வரும் காட்சியை மின்சும் வகையில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு நாய்காக தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளது அம்மாநில காவல்துறை. மீரட் நகர ஆணையரான ஐ.ஏ.எஸ் அதிகாரி செல்வகுமாரி செல்லமாக வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாயை தேடியே போலீசார் 36 மணி நேரம் அலைந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் காணாமல் போன ஆணையரின் நாயை கண்டுபிடிக்க 500க்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கால்நடை நலத்துறை அதிகாரி ஹர்பால் சிங் தலைமையிலான அதிகாரிகள் குழு நாயின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு காவல்துறை உதவியுடன் மேற்கொண்ட சோதனை சர்ச்சையாகியுள்ளது. மீரட் நகரில் 19 ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய்கள் இருப்பதால் யாரோ ஒருவர் வேண்டும் என்றே நகராட்சி ஆணையரின் நாயை பிடித்து வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
36 மணி நேரம் தேடியும் நாய் கிடைக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில் தனது நாய் மீண்டும் கிடைத்து விட்டதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி செல்வகுமாரி தெரிவித்துள்ளார். நாயை கண்டுபிடிப்பதற்காக காவல்துறை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவதையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். எனது நாய் திருடபடவும் இல்லை. போலீஸ் உதவியும் கோரப்படவில்லை என்று டிவிட்டரில் அவர் விளக்கமளித்துள்ளார்.
வீட்டின் வாசல் கதவு திறந்திருந்ததால் வெளியே சென்ற அந்த நாயை அக்கம் பக்கத்தினர் மீட்டு தன்னிடம் ஒப்படைத்து விட்டதாகவும் செல்வகுமாரி கூறியுள்ளார். இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர் முகமத் அஸாம்கான் வீட்டிலிருந்து எருமைமாடுகள் காணாமல் போனபோது ஒட்டு மொத்த போலீஸ் படையும் அவற்றை தேடும் பணியில் ஈடுபட்டதும் அவை மொரதா பாத் நகரில் மீட்கப்பட்டதும் பெரிய அளவில் பேசப்பட்டது.