சென்னை: திமுக கூட்டணியை ஆதரித்து 30 தொகுதிகளில் நேரடியாக பிரச்சாரம் மேற்கொள்ள திட்டம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மோடி பிரதமர் என்பதற்காக அவருக்கு தலைவணங்குவேனே தவிர தன்மானத்தை விட்டு தலைவணங்க மாட்டேன் எனவும் ம.நீ.ம. நிர்வாகிகளுடனான பிரச்சார வழிகாட்டுதல் ஆலோசனை கூட்டத்தில் கமல் பேசினார்.
மேலும் அவர் பேசியதாவது; “என் அரசியல் எதிரி சாதியம்தான். மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதால்தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன். மோடி பிரதமர் என்பதற்காக தலை வணங்குவேனே தவிர தன்மானத்தை விட்டு தலைவணங்க மாட்டேன்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு நிறைய பேர் வருத்தப்பட்டார்கள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல, வியூகம். இந்த முடிவை எப்படி என்ன தைரியத்தில் எடுத்தீர்கள் என்றெல்லாம் ராஜாஜியை கேட்டது போல் என்னையும் கேட்பார்கள் அவர் சொன்ன பதிலை தான் நானும் செல்லுவேன்.
நான் காந்தியின் கொள்ளு பேரன். நாம் காந்தியின் கொள்ளு பேரன்கள். எனக்கு சந்தர்ப்பவாதம் என்ற ஒரு வாதமே இல்லை. நம் வாதத்தை சந்தர்ப்பத்திற்கேற்ப பேசக்கூடாது” என கமல்ஹாசன் பேசினார்.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து ஈரோட்டில் இருந்து மார்ச் 29-ம் தேதி கமல்ஹாசன் பிரச்சாரத்தை தொடங்குகிறார். மார்ச் 29-ல் ஈரோடு, 30-ல் சேலம், ஏப்.2-ல் திருச்சி, 3-ல் சிதம்பரம், 6-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர், சென்னை, ஏப்.7-ல் சென்னை, 10-ம் தேதி மதுரை, 11-ல் தூத்துக்குடி, 14-ல் திருப்பூர், 15-ல் கோவை, 16-ல் பொள்ளாச்சியில் கமல்ஹாசன் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.