திருவொற்றியூர்: திமுக மீனவரணி சார்பில் 19ம் ஆண்டு சுனாமி தின அனுசரிப்பு நிகழ்ச்சி, மாநில துணை தலைவர் கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமையில், திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தில் நேற்று நடந்தது. இதில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கலாநிதி வீராசாமி எம்பி, மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ ஆகியோர் படவேட்டம்மன் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக வந்து கடலில் பால் ஊற்றி, மலர் தூவி, சுனாமியில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, அங்கு திரண்ட உறவினர்கள், இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் 2 ஆயிரம் பேருக்கு திமுக சார்பில் அரிசி, மளிகைபொருட்கள், வேட்டி, சேலை போன்ற நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்வில், கவுன்சிலர்கள் கே.பி.சொக்கலிங்கம், பானுமதி சந்தர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மதன் குமார், நிர்வாகிகள் ராமநாதன், பால உமாபதி, சைலஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கழகம் சார்பில், அதன் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் எர்ணாவூர் பாரதியார் நகர் பகுதி கடற்கரையில் நிர்வாகிகள் தங்கமுத்து, மதுரை வீரன், பாஸ்கர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, தமிழ்நாடு தலைவர் ஏ.ஜோர்தான், மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் கவுன்சிலர், ஏ.தீர்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு அருகே கடற்கரையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
சுனாமி பேரலையால் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திமுக சார்பில் காசிமேடு சிக்னலில் இருந்து ஊர்வலமாக நடந்து சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும் சென்னை மாநகராட்சி நகரமைப்பு நிலை குழு தலைவருமான இளைய அருணா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, திமுக பகுதி செயலாளர்கள் லட்சுமணன், சுரேஷ், செந்தில்குமார், மாநகராட்சி மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று காசிமேடு கடலில் மலர் தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில் வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் அதிமுகவினர், செங்கை மீன்பிடி தொழிற்சங்கம் சார்பில் நிர்வாகிகள், மீனவ சங்க நிர்வாகிகள், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.