சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி முன்கூட்டியே கலைஞர் மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு கட்ட நடைமுறைகளுக்கு 1.70 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.06 கோடி பேர் தகுதியுடையவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்படி, கடந்த செப்.15ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் இந்த திட்டமானது அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிரின் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்க திட்டப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மாதம் 15ம் தேதி ஞாயிற்று கிழமை வந்ததால் 14ம் தேதியே தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இதுமட்டுமின்றி மகளிர் உரிமை தொகை பெற அதிகப்படியானோர் கூட்டுறவு வங்கிகளில் மூலமாக வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளனர். மேலும், வங்கி கணக்கில் சிக்கல் உள்ளவர்களுக்கு மணி ஆர்டர் மூலமும் பணம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், இந்த மாதம் தீபாவளி பண்டிகை 12ம் தேதி வருவதால் அதற்கு முன்னதாக மகளிர் உரிமை தொகை கிடைக்குமா? என்று இல்லத்தரசிகள் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று இம்மாதத்திற்கான தொகை தீபாவளி பண்டிகையை ஒட்டி முன்கூட்டியே கலைஞர் மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தேர்வான பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. காலை முதல் தகுதியுள்ள மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.1000 டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், 1.70 கோடி விண்ணப்பங்களில் 70 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிராகரிக்கபப்ட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம் என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.