திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி காரில் இருந்து ரூ.20 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸ் பறிமுதல் செய்தது. அமலாக்கத்துறையின் என்போர்ஸ்மென்ட் அதிகாரியாக இருந்து வருபவர் அங்கித் திவாரி. இவர் டாக்டர் ஒருவரிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் பணத்தை பறித்துள்ளார். மிரட்டி பணம் பறிக்க முயன்ற அங்கித் திவாரி குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் டாக்டர் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் டாக்டரிடம் இருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு காரில் தப்ப முயன்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அமலாக்கத்துறை அதிகாரி சிக்கினார். இந்த சம்பவம் போன்று செல்வந்தர்கள் பலரிடமும் பணம் பறிக்கும் முயற்சி நடந்துள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மிரட்டி பணம் பறிக்க முயன்ற அங்கித் திவாரி மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியை திண்டுக்கல் EB காலனியில் உள்ள காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிரட்டி பணம் பறித்த புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டிருப்பது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.