Friday, May 17, 2024
Home » திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க இலக்கு

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க இலக்கு

by Lakshmipathi

*அமைச்சர் சக்கரபாணி தகவல்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காவிரி கூட்டுக் குடிநீர்திட்டப்பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்காக ரூ.4,187 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக குடிநீர், சாலைவசதி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். குடிநீர் தேவைக்காக பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இருந்தபோதிலும், மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்பவும், எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டும் புதிய குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூர் மற்றும் நெய்க்காரப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,422 ஊரகக் குடியிருப்புகளுக்காகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 11 ஒன்றியங்களில் உள்ள 2,306 ஊரகக் குடியிருப்புகளுக்காகவும், காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ.4,187.84 கோடி நிர்வாக ஒப்புதல் அரசாணை வழங்கப்பட்டது.

இத்திட்டம் ஜல் ஜீவன் மிஷன் மற்றும் அம்ரூத் திட்டங்களின் நிதி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.இத்திட்டத்தில் மொத்தம் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 3,728 ஊரகக் குடியிருப்புகளும் பயன்பெற உள்ளன. இத்திட்டத்திற்கான எதிர் வரும் 2039ம் ஆண்டில் மக்கட்தொகையை கருத்தில்கொண்டு 23.93 லட்சம் மக்களுக்கு 103.62 மில்லியன் லிட்டர் குடிநீரும், 2054ம் ஆண்டு மக்கட்தொகையை கருத்தில் கொண்டு 25.11 லட்சம் மக்களுக்கு 135 மில்லியன் லிட்டர் வீதம் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஊரகப்பகுதியில் நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் குடிநீர், பேரூராட்சிப் பகுதிகளில் நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 90 லிட்டர் குடிநீர் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக, கரூர் மாவட்டம், நஞ்சைப்புகளூர் என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு உட்கொள்ளும் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பெறப்படும் இயல்பு நீர் 50.8 கி.மீ க்கு அப்பால் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அமைக்கப்படும் 135 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இரு பிரிவுகளாக இராமநாதபுரம் மாவட்டத்திற்கும், திண்டுக்கல் மாவட்டத்திற்கும் நீரேற்றக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளது. இத்திட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கான குடிநீர்த் திட்ட அமைப்பு (அமைப்பு-1) மேற்கொள்ளப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஒட்டன்சத்திரம், பழனி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்கான குடிநீர்த் திட்ட அமைப்பு (அமைப்பு-2) மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஒட்டன்சத்திரம், பழனி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த எதிர்வரும் 2039 ஆண்டில் மக்கட்தொகையை கருத்தில்கொண்டு 5.76 லட்சம் மக்களுக்கு 35.87 மில்லியன் லிட்டர், வரும் 2054ம் ஆண்டு மக்கட்தொகையை கருத்தில் கொண்டு 6.48 இலட்சம் மக்களுக்கு 43.69 மில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கும், ஒரு நகராட்சிக்கும் மற்றும் இரண்டு பேரூராட்சிகளுக்கும் சுமார் 101.00 கி.மீட்டர் தூரம் நீருந்து குழாய்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1028.00 கி.மீட்டர் நீளமுள்ள நீருந்து குழாய்கள் மூலம் ஊரகக் குடியிருப்புகளுக்கு, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு செல்லப்பட உள்ளது.

ஒட்டன்சத்திரம், பழனி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் புதிதாக அமைக்கப்படவுள்ள 172 புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 589 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்படவுள்ளது. பின்னர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் புதிதாக அமைக்கப்படும் பகிர்மானக் குழாய்கள் மூலம் பயனாளிகளுக்குக் குடிநீர் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 506 ஊரகக் கிராமங்களில் 35,191 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளன.

மேலும், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியங்களுக்கான குடிநீர்த்திட்ட அமைப்பு (அமைப்பு-3) மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் எதிர் வரும் 2039 ஆண்டு மக்கட்தொகையை கருத்தில்கொண்டு 4.60 இலட்சம் மக்களுக்கு 19.48 மில்லியன் லிட்டர், 2054-ஆம் ஆண்டு மக்கட்தொகையை கருத்தில்கொண்டு 5.31 இலட்சம் மக்களுக்கு 23.38 மில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் ஒரு பகுதியான (அமைப்பு-2) ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூர், நெய்காரப்பட்டி பேரூராட்சிகள், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 506 ஊரக குடியிருப்புகளுக்கு ஏற்கனவே உள்ள நத்தம் மற்றும் வேடசந்தூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி சட்டமன்றத் தொகுதிகளுக்கு செல்லும் குடிநீரை இணைப்பு மாற்றம் செய்து ரெட்டியார்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 916 ஊரகக் குடியிருப்புகளுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் வழங்கும் வகையில் (அமைப்பு 3) வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரெட்டியார்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 57 புதிய தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. 1,147 கி.மீட்டர் நீளத்திற்குப் புதிய குடிநீர்க்குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. புதிதாக அமைக்கப்பட உள்ள 503 புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 525 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்பட உள்ளது.

பின்னர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள பகிர்மானக்குழாய்கள் மூலம் பயனாளிகளுக்குக் குடிநீர் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 916 ஊரகக் கிராமங்களுக்கு 40,133 வீட்டுக்குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளன. திட்டம் 6 சிப்பங்களாகப் பிரிக்கப்பட்டு, பணிகள் தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

You may also like

Leave a Comment

5 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi