Saturday, July 27, 2024
Home » ‘தில்’ இருக்கா என சீண்டிவிடும் தேனிக்காரர் அணி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘தில்’ இருக்கா என சீண்டிவிடும் தேனிக்காரர் அணி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

by Suresh

‘‘தேனிக்காரரை குமரியில யாரும் கண்டுக்கலையாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘குமரிக்கு வெள்ள பாதிப்பை பார்வையிட தேனிக்காரர் வருவதாக ஒருநாள் முன்னரே வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது. ஆனாலும், குமரிக்கு வந்த அவரை ஒரு சிலர் மட்டுமே வரவேற்றுள்ளனர். அஞ்சுகிராமம் பகுதியில் வெள்ளம் வடிந்து, சாலையும் பழுது பார்க்கப்பட்டதால், காரில் இருந்து இறங்கவில்லையாம். நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடு ெசய்யவில்லையாம். மைலாடியில் மட்டும் அப்பகுதி கவுன்சிலர் உள்ளிட்ட சில பெண்கள் நின்றதால், அவர்களிடம் மட்டும் புகைப்படம் எடுத்து விட்டு, நாகர்கோவில் வராமல் மருங்கூர் வழியாக நெல்லை திரும்பிவிட்டாராம்.

அப்போது கட்சி நிர்வாகிகளை கடிந்து கொண்ட அவர், இதற்கு தூத்துக்குடியாவது சென்றிருப்பேன் எனக்கூறி வருத்தப்பட்டாராம். இதற்கிடையே அவரது அணியை சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கு அவரது வருகை குறித்து தகவல் தரவில்லையாம். இதனால், அந்த நிர்வாகியும், முகநூலில் அவமானங்கள் தனக்கு பழகிவிட்டது. இதுவும் கடந்து போகும் என்றதுடன், சின்னதம்பி படத்தில் வரும், குயிலை பிடிச்சு கூண்டில் அடைத்து பாடலை பதிவிட்டுள்ளார்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டெல்டா மாவட்டங்கள்ல தாமரை பாத யாத்திரைக்கு களமிறங்கும் விட்டமின் ‘ப’ பற்றி சொல்லுங்களேன்’’ என்று பீட்டர் மாமா ஆவலோடு கேட்டார்.

‘‘அடுத்த வாரம் டெல்டா மாவட்டங்கள்ல தாமரை கட்சி தமிழக தலைவரோட பாதயாத்திரை நடக்குது… இதற்கான ஏற்பாடுகள கட்சி நிர்வாகிங்க செஞ்சுகிட்டு வர்றாங்க…இந்த நிகழ்ச்சியில கூட்டத்தை அதிகமா கூட்டணும்னு நிர்வாகிகளுக்கு தலைமை ரகசிய உத்தரவு போட்டிருக்குதாம்… இதனால் நிர்வாகிங்க கலக்கத்துல இருக்குறாங்களாம்… அதிகமா கூட்டத்த கூட்டுறது முடியாத காரியம்ன்னு அவங்க தலைமைக்கு தகவல் சொன்னாங்களாம் … ஆனா, விட்டமின் ப கொடுத்தாச்சும், கூட்டத்த கூட்டுங்கன்னு அவங்களுக்கு கண்டிப்பான உத்தரவு போடப்பட்டுருக்காம்… அதனால தற்போது இருந்தே அதற்கான வேலையில கட்சி நிர்வாகிகள் இறங்கியிருக்காங்களாம்… முக்கியமா ஆள் பிடிக்கும் வேலையில நிர்வாகிங்க இறங்கியிருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆட்டம் போடும் பெண் அலுவலர் பற்றி சொல்லுங்களேன்..’’ என பீட்டர் மாமா கேட்டார்.

‘‘கோவை மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் சர்வேயர்கள், துணை சர்வேயர்கள், நில அளவையர்கள் போன்றவர்கள் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். விண்ணப்பங்களின் வருகைக்கு ஏற்ப, அவற்றை பரிசீலனை செய்து, நில அளவை செய்வது, சப்-டிவிசன் செய்வது, சர்வே செய்வது இவர்களது பணி. இந்நிலையில், மதுக்கரை தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் “தவ’’மான பெண் சர்வேயர் ஒருவர், ரியல் எஸ்டேட் பிரமுகர்கள் உள்பட பல முக்கியஸ்தர்களிடம் கரன்சி கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறாராம்.

இதுபற்றி கேள்வி கேட்டால், ‘’எங்கள் துறையில் உதவி இயக்குநர் உள்ளிட்ட மேலதிகாரிகளுக்கு சில பல லட்சங்கள் கொடுத்துவிட்டுதான் இங்கு வந்து அமர்ந்துள்ளேன்… என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது’’ என வீராப்பாக பேசுகிறாராம். இந்த பெண்மணிக்கு உறுதுணையாக, ஆறு எழுத்து பெயர் கொண்ட ஒரு ஆண் சர்வேயர் உள்ளாராம். அவரது உதவியுடன் இந்த அம்மணியின் ஆட்டம் அதிகமாக உள்ளதாம். இவர்கள் இருவரையும், மேலதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் விண்ணப்பதாரர்கள்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நாடாளுமன்ற தேர்தல் ஒரு பொருட்டே இல்லேன்னு சேலத்துக்காரரு இருக்காராமே உண்மையா?’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் பாஜ கூட்டணியில இருந்து அதிரடியா வெளியே வந்துட்டாரு. தங்களது தலைமையில்தான் கூட்டணின்னு சொன்னதோடு மட்டுமல்லாமல் பெரும் குடச்சலை அக்கட்சியின் மாநில தலைவரான மாஜி போலீஸ் ஆபீசர் கொடுத்தாராம். இனிமேல் இந்த கூட்டணியில் நீடிக்க முடியாதுன்னுதான் அந்த முடிவை எடுத்தாராம் சேலத்துக்காரர். ஆனால் எல்லாமே ஒரு நாடகமுன்னு அவரோட கட்சிக்காரர்களே சொல்றாங்க.
தேர்தல் ஆணையத்துல இலைக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருன்னு தேனிக்காரர் பெயர் தான் இருக்காம். சேலத்துக்காரர் வெளியே வந்தவுடன் தேனிக்காரர் சாஸ்டாங்கமாக டெல்லியின் காலில் போய் விழுந்திட்டாராம். நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறோமுன்னுட்டாராம். ஆனால் அவரிடம் தொண்டர் படை குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லையாம்.

என்றாலும் தேனிக்காரரை கைக்குள் வைத்துக்கொண்டு டெல்லி மேலிடம் சேலத்துக்காரருக்கு மிரட்டல் விடுத்துக்கிட்டே இருக்குதாம். ஆனா, வரும் நாடாளுமன்ற தேர்தல் சேலத்துக்காரருக்கு ஒரு பொருட்டே இல்லையாம். ஒன்லி சட்டமன்றத்தை மட்டுமே குறி வச்சிருக்காராம். இதனால எதையும் கண்டும் காணாதது போல சேலத்துக்காரர் இருந்தாலும், அவரது நெருங்கிய ரெண்டாம்கட்ட தலைகள் பாஜ தொடர்புலதான் இருக்காங்களாம். ‘‘இவ்வளவு வீராவேசமாக பேசும் சேலத்துக்காரர், தில் இருந்தால் இலைக்கட்சி பொதுக்குழுவில் பாஜவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லைங்குற தீர்மானத்தை போடமுடியுமான்னு தேனிக்காரரின் அடிப்பொடிகள் கேள்வி கேட்குறாங்களாம். அப்படியாவது ஒரு தீர்மானத்தை போட்டு நாம உள்ளே போயிடமாட்டோமாங்குற ஒரு நப்பாசை தான்’’னு சிரிச்சிக்கிட்டே சொல்லுதாம் தேனிக்காரரின் கூட்டம்’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

eight + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi