சென்னை: கூவத்தூரில் நடிகைகளை வைத்து கூத்தாடிச்சது தெரியாது. ஒரு நடிகைக்கு ரூ.25 லட்சம் தரப்பட்டது என்று அதிமுக மாஜி நிர்வாகி பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. இவர் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். அதில், ‘தனது மருமகனுக்கு, பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மற்றும் அங்கன்வாடி சத்துணவு பணியாளர் வேலைக்கு 2 பேரிடம் தலா ரூ.5 லட்சம் வாங்கிவிட்டு, பணியை பெற்றுத்தரவில்லை’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஏ.வி.ராஜூவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி கடந்த 16ம் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ஏ.வி.ராஜூ கடந்த 18ம் தேதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலத்துக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது. எடப்பாடி பழனிசாமியின் பினாமியாக வெங்கடாசலம் இருப்பார் போல தெரியுது. எடப்பாடி பழனிசாமி 1991-1996 காலக்கட்டத்தில் சேலம் ஆவின் ஒன்றிய தலைவராக இருந்தபோது பால், நெய் கடத்தி பல ஊழல்களை செய்தார். கூவத்தூரில் கூத்தாடிச்சது தெரியாது. நானும் போய் பார்த்ததேன். அப்போது, மாவட்ட செயலாளர் ஒருவர் குறிப்பிட்ட இந்த நடிகைதான் வேண்டும் என்று தெரிவித்தார். அங்கிருந்த நடிகர் ஒருவர்தான் அனைவருக்கும் நடிகைகளை அழைத்து வந்தார். குறிப்பிட்ட அந்த நடிகைக்கு ரூ.25 லட்சம் கொடுத்து அழைத்து வந்தாங்க. ஆனால் அங்கு நடந்த அந்தரங்கத்தையெல்லாம் நான் பார்க்கவில்லை. இதற்கான ஆதாரமும் என்னிடம் இல்ைல. இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமிதான் பணம் கொடுத்தாரு’ என ஏ.வி. ராஜூ தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்ளில் வைரலானதை தொடர்ந்து, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு நடிகையின் பெயரை சொல்லி அவருக்கு களங்கம் ஏற்படுத்துவதா? என்று திரையுலகினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
* பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி: அரசியலில் ஒருவரையொருவர் தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்னையில் தேவையில்லாமல் ஆதராமற்ற குற்றச்சாட்டுகளை கீழ்த்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள். இத்தகைய அநாகரீகமான கீழ்த்தரமான செயலை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறோம். பஞ்சாயத்து தலைவரிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் பாரத குடியரசின் தலைவராக மர்மு வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற இந்த பாரத தேசத்தின் பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும் நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்பு கரம் கொண்டு களைய வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
* நடிகர் சேரன்: நடிகரும், இயக்குநருமான சேரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: ‘வன்மையாக கண்டிக்கிறேன்…எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்.
இயக்குநர் திரு: ஆதாரமற்ற வதந்திகளைப் பார்த்து ஏமாற்றம் அடைந்தேன். அவருடைய அசாத்தியமான திறமை பேசுகிறது. இந்த திறமையான நடிகை இடமிருந்து மேலும் பார்க்க காத்திருக்க முடியாது! உங்களுக்கு அதிக சக்தி.
* நடிகை கஸ்தூரி: நடிகைகள் மீது ஏ.வி.ராஜு கூறிய அதிர்ச்சிகரமான அவதூறுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து விரைவான மற்றும் வலுவான எதிர்வினை தேவை என்று நான் நம்புகிறேன் என்று எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
* நடிகர் மன்சூர் அலிகான்: அரசியல்வாதி என்ற பெயரில் ஒரு ஈனத்தனமான, கேலமான, அருவருக்கத்தக்க வகையிலே திரைத்துறையில் உள்ள சக நடிகர்களை, சகோதரிகளை பேசி நபர் மிகவும் வருத்தப்பட வேண்டும். தவறு செய்திருக்கார். மிகவும் கீழ்த்தனமாக பேசி உள்ளது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது. இதுபோன்ற பேச்சுகள் மிகவும் ஆபத்தானவை. இது சமுதாயத்தை பாதிக்கும். உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* நடிகர் விஷால்: ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு முட்டாள் நம் திரையுலகைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதாகக் கேள்விப்பட்டேன். உங்கள் பெயரையோ, நீங்கள் குறிவைத்த நபரின் பெயரையோ நான் குறிப்பிட மாட்டேன். உண்மையைச் சொன்னால், நான் உங்களைக் கண்டிக்க விரும்பவில்லை, இது ஒரு குறையாக இருக்கிறது. குறைந்தபட்சம் சில அடிப்படை ஒழுக்கங்களையாவது கற்றுக்கொள்ள நீங்கள் ஒரு பிச்சைக்காரனாக மாறுங்கள்.
* திரிஷாவிடம் மன்னிப்பு கேட்கிறேன் ஏ.வி.ராஜூ வீடியோ வெளியீடு
அதிமுக மாஜி நிர்வாகி ஏ.வி.ராஜூ ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், ‘‘சமூக வலைதளங்களில் சிலர் என் மீது அவதூறான செய்தியை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தியை நான் எந்த இடத்திலும் பரப்ப சொல்லல. அந்த செய்தியை சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் சொன்னார். நான் மீண்டும் அந்த நபரின் பெயரை சொல்ல விரும்பவில்லை. அதுவும் அந்த அம்மாவை பற்றி நான் எந்த இடத்திலும் விமர்சனத்திற்கு கொண்டு வரவில்லை. எனக்கும், அவருக்கும் (வெங்கடாசலம்) இடையே காழ்புணர்ச்சி அரசியல் ரீதியாக இருந்ததே தவிர, எந்த இடத்திலும் திரைப்பட நடிகையையோ, மற்றவர்களையோ சொல்லல. இது தவறாக சித்தரித்து காட்டிட்டு இருக்காங்க. அது எப்படினு எனக்கு தெரியல. திரைப்பட இயக்குநர்கள் சேரன், செல்வமணி, நடிகை திரிஷா ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். ஒருவேளை உங்களது மனது புண்படும்படியாக இருந்திருந்தால், நான் சமூக வலைதளம் மூலமாக எனது மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்,’’ எனக்கூறியுள்ளார்.