சென்னை: ஆருத்ரா உள்ளிட்ட மோசடி நிறுவனங்களின் வழக்கு நிலவரங்கள் குறித்தும், மோசடி நிறுவனங்களின் ஏஜென்டுகளாக செயல்பட்ட 1500 பேர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அவர்களிடம் இருந்து இழப்பீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவின் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவு விசாரித்து வரும் வழக்குகள் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி அபின் தினேஷ், ஐஜி ஆசியம்மாள், எஸ்பிக்கள் கலந்து ெகாண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய மோசடி வழக்குகளான ஆருத்ரா கோல்ட் டிரேடிங் கம்பெனி, எல்.என்.எஸ் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீசஸ், ஹிஜாவு அசோசியேட்ஸ், எல்பின், திரிபுரா சிட்ஸ், யூனிவர்சல் டிரேடிங் சொல்யூசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளின் தற்போதைய விசாரணை நிலை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான கைது நடவடிக்கை, முதலீட்டாளர்களுக்கு பணம் விரைவாக திரும்ப கிடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதோடு இல்லாமல் வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற சிலரை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை இந்தியா கொண்டுவர ரெட் கார்னர் நோட்டீஸ் பெற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்து நீதிமன்ற உத்தரவை பெற்று அவற்றை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும், இந்நிறுவனங்களில் முகவர்களாக செயல்பட்ட சுமார் 1500 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், அவர்களிடமிருந்து இழப்பீட்டை பெறவும், மேலும், பணம் முதலீட்டு நிறுவனங்களில் ஆரம்ப காலங்களில் சேர்ந்து பெரும் லாபம் அடைந்தவர்களிடமிருந்து இழப்பீடு பெற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
* இரவில் தனியாக செல்லும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட அறிக்கை: பெண்கள் பாதுகாப்புக்கென புதிய திட்டம் ஒன்றை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், காவல்துறையின் உதவி எண்கள் 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகியவற்றை அழைக்கலாம். காவல் ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை இலவசமாகும்.