Monday, June 3, 2024
Home » சென்னையை சேர்ந்த 92 வயதான முதியவருக்கு வெற்றிகரமான இரட்டை இயக்க இடுப்பு உட்பதிய சிகிச்சை: ரேலா மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

சென்னையை சேர்ந்த 92 வயதான முதியவருக்கு வெற்றிகரமான இரட்டை இயக்க இடுப்பு உட்பதிய சிகிச்சை: ரேலா மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

by Dhanush Kumar

சென்னை: சென்னையை சேர்ந்த 92 வயதான முதியவருக்கு வெற்றிகரமான இரட்டை இயக்க இடுப்பு உட்பதிய சிகிச்சை செய்து ரேலா மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். இது குறித்து ரேலா மருத்துவமனையின் மூட்டு மாற்று சிகிச்சை துறையின் தலைவர் மற்றும் எலும்பு முறிவியல் துறையின் முதன்மை மருத்துவர் எஸ்.கவாஸ்கர் கூறியதாவது: சென்னையை சேர்ந்த 92 வயது முதியவர் வீட்டிலிருந்து கீழே தவறி விழுந்ததன் காரணமாக, இடுப்பு முறிவு ஏற்பட்டு, படுக்கையிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக ரேலா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு பரிசோதனை மற்றும் கலந்தாலோசனையின் அடிப்படையில் முறிவடைந்த இடுப்புகளுக்கு பதிலாக முழுமையான இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை இரட்டை இயக்க இடுப்பு உட்பதியத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார்.

வயது முதிர்ந்த நோயாளிக்கான சிகிச்சையில் எதிர்கொண்ட முக்கிய சவால் என்பது, அவரது வயது மற்றும் அவர் உடல்நலம் தொடர்பான பிற சிக்கல்களை கருத்தில் கொண்டு, 60 நிமிடங்களுக்குள் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இரட்டை இயக்க இடுப்பு உட்பதியம் பொருத்துவதன் ஆதாயம் என்னவென்றால், உடலின் அசைவு இயக்கத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இதனால் ஏற்படுவதில்லை. இந்த சிகிச்சையை மேற்கொண்ட நபர்கள், அமரலாம், குந்தி உட்காரலாம், கால்களை மடக்கலாம் மற்றும் அவர்கள் இடுப்பில் எவ்வித வலியுமின்றி, இந்திய முறையிலான கழிப்பறைகளை கூட தாராளமாகப் பயன்படுத்தலாம். அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரங்களுக்குள் அவர்கள் விரும்புகிறவாறு நடமாடவும், இயற்கையான நடவடிக்கையை மேற்கொள்ளவும் முழுமையான சுதந்திரம் இவர்களுக்கு கிடைக்கிறது. வயதான நபர்கள் பொதுவாக அவர்களது குளியலறை, கழிப்பறைகளில் வழுக்கி, தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எலும்புகளின் குறைவான அடர்த்தியின் காரணமாக, கீழே விழும்போது, இடுப்பெலும்பு முறிவுகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. எலும்பு முறிவுக்கு உரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவில்லை எனில், உடலின் அனைத்து பாகங்களையும் இது பாதித்து விடும். இவ்வாறு அவர் கூறினார். சிகிச்சை குறித்து முதியவரான ராகவேந்திரா ராவ் கூறுகையில், ‘‘வேறு எவரையும் சாராமல் இப்போது என்னால் செயல்பட முடிகிறது. யார் உதவியும் இல்லாமல் என்னால் நடக்கவும், தினசரி செயல்பாடுகளை வழக்கம்போல் செய்யவும் சாத்தியமாகியிருக்கிறது. எனக்கும், எனது குடும்பத்திற்கும் இந்த சிகிச்சை பெரும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்திருக்கிறது’’ என்றார்.

You may also like

Leave a Comment

19 − 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi