Saturday, May 11, 2024
Home » இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 14 திருக்கோயில்களில் ரூ.131.15 கோடி மதிப்பீட்டிலான 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 14 திருக்கோயில்களில் ரூ.131.15 கோடி மதிப்பீட்டிலான 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by MuthuKumar

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 14 திருக்கோயில்களில் ரூ.131.15 கோடி மதிப்பீட்டிலான 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 15 திருக்கோயில்களில் ரூ.29.27 கோடி மதிப்பீட்டிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, சோளிங்கர், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.20.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தியை பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, புதுக்கோட்டை தேவஸ்தானத் திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக உயர்த்தப்பட்ட அரசு மானியமாக ரூ.5 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் 8.3.2024 அன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக 14 திருக்கோயில்களில் ரூ.131.15 கோடி மதிப்பீட்டிலான திருமண மண்டபங்கள். சுற்றுப்பிரகார மண்டபம், அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு. வகுப்பறைகள் மற்றும் நூலகம், இளைப்பாறும் மண்டபம். பக்தர்கள் தங்கும் விடுதிகள், இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்கள். வணிக வளாகங்கள். பெருந்திட்ட வளாகப் பணிகள் போன்ற 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 15 திருக்கோயில்களில் ரூ.29.27 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விருந்து மண்டபம், காதுகுத்து மண்டபம், முடிகாணிக்கை மண்டபம், பணியாளர் குடியிருப்பு, திருமண மண்டபம். சஷ்டி மண்டபம், வாகன நிறுத்துமிடம், சேவார்த்திகள் தங்கும் விடுதி. கல்லூரி ஆராய்ச்சிக் கூடம், அர்ச்சகர் குடியிருப்பு, அன்னதான கூடம், வைணவ பிரபந்த பாடசாலை, வணிக வளாகம், பள்ளி அலுவலகம் மற்றும் நூலகம் போன்ற 17 பணிகளை திறந்து வைத்தார்.

14 திருக்கோயில்களில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
திருவள்ளூர் மாவட்டம். திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகம் அமைக்கும் பணிகள்:
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 33.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம், அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு, பேருந்து நிலைய அபிவிருத்தி, வாகன நிறுத்துமிடம் மற்றும் பக்தர்கள் ஓய்வு மண்டபம் கட்டும் பணிகள்; திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் 11.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைகள் மற்றும் நூலகம் கட்டும் பணிகள் மற்றும் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 3.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி: ஈரோடு மாவட்டம், பண்ணாரி, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் 6.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுப்பிரகார மண்டபம் கட்டும் பணி: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை, அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் 5.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி: திருவாரூர் மாவட்டம், மாப்பிள்ளைக்குப்பம்.

அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயிலில் 4.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி;
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம், அருள்மிகு போர்மன்னலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி: தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம், அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் 3.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி மற்றும் சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி: கடலூர் மாவட்டம், திருபாதிரிபுலியூரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணை ஆணையர் அலுவலகம் கட்டும் பணி; காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி; காஞ்சிபுரத்தில் 2.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணை ஆணையர் அலுவலகம் கட்டும் பணி: புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டையில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி:

தர்மபுரி மாவட்டம், தர்மபுரியில், 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி மற்றும் குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 1.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி; தேனி மாவட்டம், தேனியில், 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி: திருவள்ளூர் மாவட்டம், திருவள் ளூரில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி: நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி, அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுப்பிரகார மண்டபம் கட்டும் பணி: சென்னை மாவட்டம். மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் 98 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி; என மொத்தம் 131.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 20 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

15 திருக்கோயில்களில் 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல்
மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் 14.14 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள விருந்து மண்டபம். காதுகுத்து மண்டபம், முடிகாணிக்கை மண்டபம், வணிக வளாகம், அருள்மிகு சுந்தரராஜ உயர்நிலைப் பள்ளி அலுவலகம் மற்றும் நூலகம்: அழகர்கோவில், அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோயிலில் 98 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளுடன் கூடிய சஷ்டி மண்டபம்; திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 96 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடம்: விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 3.22 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்பு: விழுப்புரம் மாவட்டம், கோலியனூர், அருள்மிகு புத்துவாயம்மன் திருக்கோயிலில் 52 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சேவார்த்திகள் தங்கும் விடுதி;

நாகப்பட்டினம் மாவட்டம். எட்டுக்குடி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 1.48 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருமண மண்டபம்; திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் 1.20 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபம்; கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை, ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரியில் 92 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி கூடம்; கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் 61 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அர்ச்சகர் குடியிருப்பு: கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 89 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம்;

தஞ்சாவூர் மாவட்டம், கரம்பயம், அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் 75 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருமண மண்டபம்; சூரக்கோட்டை, அருள்மிகு பரமநாத அய்யனார் திருக்கோயிலில் 56 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அன்னதானக் கூடம்: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம்,
நெம்மேலி ஆளவந்தார் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 96 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வைணவ பிரபந்த பாடசாலை; திருப்போரூர், அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் 94 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் மற்றும் ஆதினக்குடியிருப்பு கட்டடம்; திருவண்ணாமலை மாவட்டம்,திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் 1.14 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மின்சார அறை: என மொத்தம் 29.27 கோடி ரூபாய் செலவிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சோளிங்கர், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.20.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தி, பக்தர்களுக்கான காத்திருப்பு அறை உள்ளிட்ட வசதிகளை திறந்து வைத்தல்
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் 9.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கம்பிவட ஊர்தி அமைத்திட 2010 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கடந்த ஆட்சிக் காலத்தில் 50 சதவீத பணிகளே நிறைவுற்றிருந்தன. இந்நிலையில் இந்த அரசு பொறுப்பேற்றபின் மீதமுள்ள பணிகளை நிறைவேற்றி, கூடுதலாக 11 கோடி ரூபாய் செலவில் பக்தர்களுக்கான காத்திருப்பு அறை. மின்தூக்கி. உணவகம். பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கட்டணச் சீட்டு மையம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கம்பிவட ஊர்தி பக்தர்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை தேவஸ்தானத் திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக ரூ.5 கோடி அரசு மானியம் வழங்குதல்
இந்து சமய அறநிலையத் துறையின் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின், “புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாக செலவினத்திற்காக வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை ரூபாய் 3 கோடியிலிருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்” என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதுக்கோட்டை தேவஸ்தானத் திருக்கோயில்களின் அன்றாட நித்தியபடி பூஜை மற்றும் திருவிழா செலவுகள், திருக்கோயில் திருப்பணி. பணியாளர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றிற்காக 5 கோடி ரூபாய்க்கான காசோலையினை புதுக்கோட்டை தேவஸ்தான தக்கார்/உதவி ஆணையரிடம் வழங்கினார்.

புதுக்கோட்டை தேவஸ்தானத்திலுள்ள 225 திருக்கோயில்களின் நிர்வாகம்
மற்றும் பராமரிப்பு செலவிற்காக 2021 2022 ஆம் நிதியாண்டு வரை 1 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அம்மானியத்தை 3 கோடி ரூபாயாக உயர்த்தி, கடந்த 27.12.2021 அன்று வழங்கினார்கள். தற்போது அத்தொகை போதுமானதாக இல்லாததால் இந்த நிதியாண்டு முதல் அரசு மானியத் தொகை 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் அ.சங்கர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கைத்தறி. துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ஆர். காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.வளர்மதி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

nine − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi