சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 22.01.2024 அன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 96 கோடியே 75 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், கலையரங்கம், விருந்தினர் மாளிகை, உடற்பயிற்சிக்கூடம், அணுகுசாலை, விடுதிகள், பணிமனைகள், கழிவறை தொகுதிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டடம் போன்ற பல்வேறு கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுநாள்வரை உயர்கல்வித் துறை சார்பில் மொத்தம் 545 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு கல்விசார் கட்டடங்கள் கட்டப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தல்;
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை கிராமத்தில் அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரியில் 4 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், விருந்தினர் மாளிகை, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் அணுகு சாலை;
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.2.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆறு ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் பெருந்துறை, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ.2.16 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நான்கு வகுப்பறைகள் மற்றும் இரண்டு ஆய்வகக் கட்டடங்கள்;
சேலம் – அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.8.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெண்கள் விடுதிக் கட்டடம் மற்றும் சேலம் – பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் ஆய்வு மையக் கட்டடம்;
கோயம்புத்தூர் – அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ.8.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் விடுதிக் கட்டடம், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் – ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் ரூ.2.64 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஆய்வகக் கட்டடங்கள், கிருஷ்ணகிரி – அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் ரூ.2.95 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் 5 கழிவறை தொகுதி கட்டடங்கள்;
கள்ளக்குறிச்சி – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.12.43 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் – அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.4.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதுகலை மாணவர்களுக்கான வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள்;
திருவண்ணாமலை மாவட்டம், நாகப்பாடி – அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ.2.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகக் கட்டடங்கள், பணிமனை மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான கழிப்பறை கட்டடம் மற்றும் செய்யாறு – அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ. 5.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 12 ஆய்வகக் கட்டடங்கள்;
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.11.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடம், திருநெல்வேலி – அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் ரூ.8.2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பணிமனை கட்டடம்;
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் – அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ.2.86 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்கள், தூத்துக்குடி மாவட்டம், – எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ.2.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்கள்;
திருச்சிராப்பள்ளி, சேதுராபட்டி – அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 2.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் கூடுதல் பணிமனைக் கட்டடம் மற்றும் திருச்சிராப்பள்ளி – அரசு கலைக் கல்லூரி மற்றும் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் தலா ரூ.2.66 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 14 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்;
மதுரை – ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ரூ.2.99 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், விருதுநகர் மாவட்டம், சிவகாசி – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.2.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள் மற்றும் பெண்கள் கழிப்பறை தொகுதி கட்டடங்கள்; என மொத்தம் ரூ.96.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், இ.ஆ.ப., தொழில் நுட்பக்கல்வி ஆணையர்
கே. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., கல்லூரி கல்வி இயக்குநர் (மு.கூ.பொ) முனைவர் கீதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காணொலிக் காட்சி வாயிலாக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் எம். சுகன்யா, துணை மேயர் கே.ஆர். ராஜு, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல புல முதல்வர் முனைவர் செண்பக விநாயக மூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்களும்; தென்காசி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார், சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா, மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிசந்திரன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.