பொன்னேரி: பாஜ எம்பி அனந்த்குமார் ஹெக்டேவின் சர்ச்சை பேச்சை கண்டித்து காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கர்நாடக பாஜ எம்பி அனந்த்குமார் ஹெக்டே அண்மையில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைக்கலாம் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், நாடு முழுவதும் இதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நேற்றுமுன்தினம் மாலை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அம்பேத்கர் சிலை எதிரே காங்கிரஸ் கட்சியின் எஸ்சி, எஸ்டி பிரிவு சார்பில் பாஜ எம்பியின் சர்ச்சை பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சட்டமாமேதையால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சாசனத்தை பாசிச பாஜ ஆட்சியாளர்கள் மாற்ற முயற்சிப்பதற்கும், பாஜ எம்பி அனந்த்குமாரின் சர்ச்சை பேச்சிற்கும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.