திருவாரூர்: திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறி வருவதும், தேச தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்தும் திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக ஆளுநரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப்பெற அவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
ஒன்றிய அரசு தொடர்ந்து மாணவர்களுக்கு எதிராக பல்வேறு கொள்கைகளை வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக தேசிய கல்வி கொள்கை திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜனநாயகத்தை பாதுகாக்க ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் காவி எங்கள் நிறமல்ல, கருப்பு எங்கள் நிறம் என மாணவர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.